திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.62 திருப்பனந்தாள் பண் - பஞ்சமம் |
கண்பொலி நெற்றியினான் திகழ்கையிலொர் வெண்மழுவான்
பெண்புணர் கூறுடையான் மிகுபீடுடை மால்விடையான்
விண்பொலி மாமதிசேர் தருசெஞ்சடை வேதியனூர்
தண்பொழில் சூழ்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.
|
1 |
விரித்தவன் நான்மறையை மிக்கவிண்ணவர் வந்திறைஞ்ச
எரித்தவன் முப்புரங்கள் இயலேழுலகில் லுயிரும்
பிரித்தவன் செஞ்சடைமேல் நிறைபேரொலி வெள்ளந்தன்னைத்
தரித்தவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.
|
2 |
உடுத்தவன் மானுரிதோல் கழலுள்கவல் லார்வினைகள்
கெடுத்தருள் செய்யவல்லான் கிளர்கீதமொர் நான்மறையான்
மடுத்தவன் நஞ்சமுதா மிக்கமாதவர் வேள்வியைமுன்
தடுத்தவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.
|
3 |
சூழ்தரு வல்வினையும் முடல் தோன்றிய பல்பிணியும்
பாழ்பட வேண்டுதிரேல் மிகஏத்துமின் பாய்புனலும்
போழிள வெண்மதியும் அனல்பொங்கர வும்புனைந்த
தாழ்சடை யான்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.
|
4 |
விடம்படு கண்டத்தினான் இருள்வெள்வளை மங்கையொடும்
நடம்புரி கொள்கையினான் அவன்எம்மிறை சேருமிடம்
படம்புரி நாகமொடு திரைபன்மணியுங் கொணருந்
தடம்புனல் சூழ்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.
|
5 |
விடையுயர் வெல்கொடியான் அடிவிண்ணொடு மண்ணுமெல்லாம்
புடைபட ஆடவல்லான் மிகுபூதமார் பல்படையான்
தொடைநவில் கொன்றையொடு வன்னிதுன்னெருக் கும்மணிந்த
சடையவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.
|
6 |
மலையவன் முன்பயந்த மடமாதையொர் கூறுடையான்
சிலைமலி வெங்கணையாற் புரம்மூன்றவை செற்றுகந்தான்
அலைமலி தண்புனலும் மதிஆடரவும் மணிந்த
தலையவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.
|
7 |
செற்றரக் கன்வலியைத் திருமெல்விரலால் அடர்த்து
முற்றும்வெண் ணீறணிந்த திருமேனியன் மும்மையினான்
புற்றரவம் புலியின் னுரிதோலொடு கோவணமுந்
தற்றவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.
|
8 |
வின்மலை நாணரவம் மிகுவெங்கனல் அம்பதனால்
புன்மைசெய் தானவர்தம் புரம்பொன்றுவித் தான்புனிதன்
நன்மலர் மேலயனும் நண்ணுநாரண னும்மறியாத்
தன்மையன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.
|
9 |
ஆதர் சமணரொடும் மடையைந்துகில் போர்த்துழலும்
நீதர் உரைக்குமொழி யவைகொள்ளன்மின் நின்மலனூர்
போதவிழ் பொய்கைதனுள் திகழ்புள்ளிரி யப்பொழில்வாய்த்
தாதவி ழும்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.
|
10 |
தண்வயல் சூழ்பனந்தாள் திருத்தாடகை யீச்சரத்துக்
கண்ணய லேபிறையான் அவன்றன்னைமுன் காழியர்கோன்
நண்ணிய செந்தமிழால் மிகுஞானசம் பந்தன்நல்ல
பண்ணியல் பாடல்வல்லார் அவர்தம்வினை பற்றறுமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |